Wednesday, January 03, 2007

24. கண்ணன் ஒரு கைக்குழந்தை!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் வாலி எழுதி, ஜேசுதாஸ்-பி.சுசீலா பாடியது! இளையராஜவின் ஆரம்ப கால ஹிட்களில் இதுவும் ஒன்றல்லவா?
படத்தின் பெயர் பத்ரகாளி என்று நினைக்கிறேன்! தவறு என்றால் சொல்லவும்!



கண்ணன்ஒரு கைக்குழந்தை
கண்கள்சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை


கையிரண்டில் நானெடுத்துப்
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ


உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா


அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தில் எல்லையது


காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா


மஞ்சள்கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசைவரும் ஒருகோடி


கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா


(கண்ணன் ஒரு)


ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ



மார்கழி 20 - முப்பத்து மூவர் - இருபதாம் பாமாலை.

26 comments :

SP.VR. SUBBIAH said...

// ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா //
மனதைக் கிறங்க வைக்கும் வரிகள்

படம் - பத்ரகாளி - வருடம் 1976

குமரன் (Kumaran) said...

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏலோர் எம்பாவாய்

முப்பத்து மூன்று கோடி தேவர்கள் முன்னே நின்று அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் வீரனே. துயில் எழாய். சிறந்த குணங்கள் உடையவனே. வல்லமை உடையவனே. பகைவருக்குத் துன்பம் கொடுக்கும் குற்றமற்றவனே. துயில் எழாய். கலசம் போன்ற மென்முலையும் சிவந்த இதழ்களும் சிறிய இடையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! துயில் எழாய். விசிறியும் கண்ணாடியும் எங்களின் நோன்பிற்காகத் தந்து உன் மணாளன் எழுந்து நாங்கள் இப்போதே மார்கழி நீராடும் படியாக நாங்கள் விரும்பியதைக் கொடுக்கும் படி செய்.

வல்லிசிம்ஹன் said...

பயத்தைக் கொடுத்து பயத்தைப் போக்குபவன் கண்ணன்.
இந்தப் பாடலில் தொடங்கி அவன் கம்பீரம் ஓரோர் சொல்லிலும் வெளிப்படும்.
படலில் குழந்தை, பாவையில் அவன் கணவன்,அரசன்,தலைவன்.
எத்தனை கண்ணன்கள் இருந்தாலும் போதாது நமக்கு.

ஷைலஜா said...

காதலும் தாய்மையும் நிரம்பிவழியும் பாடல்.ஜேசுதாஸ்
சுசீலாவின் இனியகுரலில் தூக்கமும் கண்களைத் தழுவுகின்றன! பாரதியின் ஆசைமுகம் அளிக்க இயலுமா கண்ணபிரானே?:)
ஷைலஜா

VSK said...

இசைஞானி உருகி இசையமைத்த ஒரு சிறந்த பாடல், ரவி!

இது பற்றி, ஒரு சுவையான கருத்தை, சங்கமம் நிகழ்ச்சியின் போது, திரு. கங்கை அமரன், விஜய் டிவியில் சொன்னார்.

ஆரம்ப காலகட்டங்களில், இளையராஜா இசையமைத்த பல பாடல்களில், அவரது தாய் பாடிய தாலாட்டுகளின் பாதிப்பு இருக்குமாம்!

இப்பாடல் கூட அவர் அப்படி தாலாட்டாய்ப் பாடிய ஒரு பாடலே!

"ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ"

என்ற சந்தத்தில் இப்பாடலைப் பாடிப் பாருங்கள்; தெரியும்!

VSK said...

"நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்"

உக்கமும் தட்டொளியும் தந்து "உன் மணாளனை"

இப்போதே "எம்மை" நீராட்டு ஏலோர் எம்பாவாய்"

Anonymous said...

ஆம் வாத்தியாரைய்யா சொன்னது போல, "ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா"...அருமையான வரிகள்..

திரு.கே.ஆர்.எஸ் மிக்க நன்றி...

Anonymous said...

பாரதி கண்ணனை பல உறவுமுறைகளில் வைத்து கண்ணன் பாட்டில் பாடியிருக்கிறார். அதேபோல கண்ணதாசனும் இப்படி உறவுமுறையில் கண்னனை பாடி இருக்கிறார். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால்,இரு கவிஞருமே சற்றும் தெய்வத் தன்மையிலிருந்தும் வழுவாமல் பாடியிருக்கிறார்கள்.

Anonymous said...

ARUMAI.

EZH PIRAPPUM INAINTHIRUPPOM

KANNANIN DASARGALAI

SRINIVASAN MADURAI

Anonymous said...

oh.. gentleman, all the songs you have selected are wonderful - i have taken out a print out - immensely i enjoyed the song - good taste - at the same time, you are giving very decent one also
en idayapoorvamana paaraatugal
yaaro

Anonymous said...

ரவிசங்கர்!
வாலியாரின் வார்த்தை;ஞானியாரின் இசை, இன்குரலோன்;இசையரசி குரலில் ,கண்ணனைத் தாலாட்டுவது கசக்குமா??
நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

நல்ல பாடல்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி வாத்தியார் ஐயா!
ஓ 1976இல் வந்த படமா? சிவகுமார் என்று நினைக்கிறேன்! நடிகை பெயர் மறந்து விட்டது!

Anonymous said...

பொருத்தமான இந்தகால கண்ணன் படம் இந்த பாட்டுக்கு. மிக சிறப்பு ரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்,
இந்தப் பாசுரத்தைக் கவனித்தீர்களா?
கப்பம், செப்பம், தட்டொளி என்று எவ்வளவு காரணப் பெயர்ச் சொற்களைப் பயன்படுத்துகிறாள்!
அருமை மிக அருமை! சொல் ஒரு சொல் வலைப்பூவிற்கு ஆண்டாள் பாசுரங்களில் சொற்கள் கொட்டிக் கிடக்கின்றன போலும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போதே எம்மை நீராட்டு ஏலோர் எம்பாவாய்//

திருப்பாவை, திருவெம்பாவை - மிக நுண்ணிய வேறுபாடுகள் இங்கு தான்!

ஆண்டாள் அத்தனை பேரையும் எழுப்பி, நீராடி, பின்னர் இறைவனிடம் செல்லவில்லை!
மாறாக அத்தனை பேரையும் எழுப்பி, நேரடியாகவே இறைவன் வீட்டுக்குச் செல்கிறாள்!
அங்கு அவனையும் எழுப்பி விட்டு, அவனையே தங்களையும் நீராட்டச் சொல்கிறாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
படலில் குழந்தை, பாவையில் அவன் கணவன்,அரசன்,தலைவன்.
எத்தனை கண்ணன்கள் இருந்தாலும் போதாது நமக்கு//

உண்மை தான் வல்லியம்மா! கண்ணன் தான் எத்தனை எத்தனை வடிவங்களில்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
ஜேசுதாஸ் சுசீலாவின் இனியகுரலில் தூக்கமும் கண்களைத் தழுவுகின்றன! //

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே என்ற பாடல் நினைவுக்கு வருகிறதே உங்க பின்னூட்டம் பாத்து!

//பாரதியின் ஆசைமுகம் அளிக்க இயலுமா கண்ணபிரானே?:)//

அரங்கப்ரியா கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா? அதுவும் அரங்கன் வலைப்பூவில்! ஓரிரு நாளில் பதிவில் இடுகிறோம் ஷைலஜா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SK said...
ஆரம்ப காலகட்டங்களில், இளையராஜா இசையமைத்த பல பாடல்களில், அவரது தாய் பாடிய தாலாட்டுகளின் பாதிப்பு இருக்குமாம்!//

நல்ல தகவல் SK ஐயா! நீங்க சொன்னப்புறம் தான் பொருத்திப் பார்த்தேன்! உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி...எல்லாம் தாலாட்டு மெட்டில் தான் இருக்கு! அட ஆமாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Mathuraiampathi said...
ஆம் வாத்தியாரைய்யா சொன்னது போல, "ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா"
...அருமையான வரிகள்..
//

ஆமாங்க மெளலி சார்!
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு", மற்றும் "உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" என்ற பாசுரங்களையும் ஒப்பு நோக்குங்கள்!

அப்படியே பாசுரத்தைப் பாமரனுக்குப் பிழிந்து கொடுத்துள்ளார் கவியரசர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்லி said...
பாரதி கண்ணனை பல உறவுமுறைகளில் வைத்து கண்ணன் பாட்டில் பாடியிருக்கிறார். அதேபோல கண்ணதாசனும் இப்படி உறவுமுறையில் கண்னனை பாடி இருக்கிறார்.//

பாரதியும் கண்ணதாசனும் என்று நீங்க ஒரு பதிவு போடலாமே செல்லி! அருமையா இருக்கும் ஒப்பீடு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
ARUMAI.
EZH PIRAPPUM INAINTHIRUPPOM
KANNANIN DASARGALAI
SRINIVASAN MADURAI//

நன்றி ஸ்ரீநிவாசன் சார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
oh.. gentleman, all the songs you have selected are wonderful - i have taken out a print out - immensely i enjoyed the song - good taste - at the same time, you are giving very decent one also
en idayapoorvamana paaraatugal
yaaro//

நன்றிங்க!
தாங்கள் பாடல்களை ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி! பலரும் மகிழ்வதில் எங்களுக்கும் மகிழ்வே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//johan -paris said...
ரவிசங்கர்!
வாலியாரின் வார்த்தை;ஞானியாரின் இசை, இன்குரலோன்;இசையரசி குரலில் ,கண்ணனைத் தாலாட்டுவது கசக்குமா??//

நன்றி யோகன் அண்ணா!
SK ஐயா கொடுத்த இசைஞானி பற்றிய குறிப்பு பாத்தீங்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sai Devotee 1970s said:
பொருத்தமான இந்தகால கண்ணன் படம் இந்த பாட்டுக்கு. மிக சிறப்பு ரவிசங்கர்//

படங்களை மிகவும் ரசிக்கிறீர்கள் போல! நன்றி சாயிபக்தரே!

VSRangachar said...

This is a superb site. My heartiest congrats for the owner of this blog. Kindly continue your service for the enjoyment of mankind.
V S Rangachar

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP